கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின் அருமையான அருங்காட்சியகங்களை பார்க்கும் போது, நமது கலாச்சாரத்தையும், வரலாற்றையும் சொல்ல இது போன்ற ஒரு அருங்காட்சியகம் இல்லையே என்று நினைத்திருக்கிறேன். இந்தியாவிலும் மும்பை, டெல்லி, சென்னையில் இருக்கும் பெரிய அருங்காட்சியங்கங்களுக்கு சென்றிருக்கிறேன். அவற்றில் நுழைந்தவுடன் ஏற்படும் முதல் சிந்தனை எப்போது வெளியே செல்வது என்பதாகத்தான் இருக்கும். சரியான வெளிச்சம் இல்லாமல், காற்றோட்டம் இல்லாமல், அந்தக்காலத்து மின்விசிறிகள் சுழல இந்த அருங்காட்சியகங்கள், பெரும்பாலும் அவற்றின் பொருட்களை வைத்திருக்க உதவும் வெறும் சரக்கு அறைகளாகவே இருக்கும். அதனாலேயே மதுரையில் இருக்கும் கீழடி அருங்காட்சியகம் முக்கியத்துவம் பெறுகிறது. 

கீழடி அகழ்வாய்வில் நிகழ்ந்த அரசியலை நாம் இங்கே பேசப் போவதில்லை. ஆனால் இத்தகைய ஒரு விரிவான நகர நாகரீகத்தை வெளிக்கொணர்வதில் கொண்டுவரப்பட்ட அரசியல் சிக்கல்கள், இன்று இங்கே நிலவும் பிரிவினை கோடுகளை மட்டுமே காட்டுகிறது. அதனாலேயே, அதையும் தாண்டி தன்னுடைய பொறுப்பில் கீழடியை எடுத்துக் கொண்டு விரிவாக அதை அகழ்வாய்ந்த தமிழக தொல்லியல் துறையை பாராட்ட வேண்டியிருக்கிறது.

ஆதிச்சநல்லூரில் முதலில் ஆய்வு செய்த அலெக்சாண்டர் ரீயாவின் ஆய்வுக்கட்டுரையை என்னுடைய 'கொற்கை' புத்தகத்திற்காக மொழிபெயர்த்த போது, ரீயா அதில் புகைப்படமாக கொடுத்திருக்கும் நூற்றுக்கணக்கான பொருட்கள் இன்று எங்கே இருக்கிறது என்று வியந்தேன். அவை இப்போது எங்கிருக்கிறது என்ற கேள்வியும், அவற்றை பொதுமக்கள் எளிதாக பார்க்க முடியாத நிலையும் நம்முடைய கலாச்சாரத்தை இருட்டடிப்பு செய்யும் என்பதுதான் உண்மை. 

கீழடி அருங்காட்சியகம்.

எனவே அகழ்வாய்ந்து வெளிக்கொணரப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைப்பதிலும், அந்த அகழ்வாய்விற்கு தங்களது வரிப்பணம் மூலம் ஆதரவளித்த பொதுமக்களுக்கு அவற்றை கொண்டு சேர்ப்பதிலும் எப்போதும் நாம் ஆர்வம் கூட்டியதில்லை. இதனாலேயே அகழ்வாய்வின் முடிவிலேயே உடனடியாக அருங்காட்சியகம் அமைத்து, அதை மிகவும் சிறப்பாக அவற்றை மக்களிடம் சேர்ப்பித்ததுதான் இந்த அரசின் பெரும் சாதனையாக இருக்கும்.

அகழ்வில் கிடைத்த ரோமானிய நாணயங்கள்.

கீழடி அருங்காட்சியகம், இன்றைய கீழடி கிராமத்திலேயே இருக்கிறது. பெரிய பரப்பளவில் விரிவாக, நமது செட்டிநாட்டு வீடுகளின் பாணியில் முற்றம், நல்ல பெரிய சன்னல்கள், தரையில் ஆத்தங்குடி கற்கள், வண்ண கண்ணாடிகள், உட்கார பெரிய திண்ணைகள் என்று பல்வேறு பகுதிகளாக கீழடி அருங்காட்சியகம் விரிகிறது. இதன் வடிவமைப்பே, நமது கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட கட்டுமானத்தை கொண்டே, நமது வரலாற்றை சொல்லும் விதம் முதலாவதாக நம்மை கவர்கிறது.

நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தவுடன், பதினைந்து நிமிட வரலாற்று படம் ஒன்று காண்பிக்கப்படுகிறது. மிகவும் தரமாக உருவாக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தில், தமிழகத்தின் வரலாறு கற்காலத்தில் இருந்து கீழடி வரை சொல்லப்படுகிறது. தமிழகத்தின் முன்னணி அறிஞர்கள் இவற்றில் வரலாற்றை எடுத்து சொல்கிறார்கள். பதினைந்து நிமிடங்களில் சொல்லவேண்டியதை எல்லாம்  சுருக்கமாக, இன்றைய தொழில்நுட்பத்துடன் சொல்லப்படும் இந்தப் படத்தை முதலில் தவறவிடக் கூடாது.

அகழ்வின் மாதிரி.

அதன் பின்னர், பல வீடுகளாக, பல தலைப்புகளில் கீழடியில் கிடைத்த பொருட்கள் பார்வைக்கு  வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு கிடைத்த பெரும் காளையின் எலும்புக்கூடுகளோடு நம் பயணம் தொடர்கிறது. இங்கே இவை காட்சிப்படுத்த பட்டிருக்கும் விதத்தை சொல்வது அவசியம். முதலில், கீழடியில் கிடைத்த பொருள் இருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்தப் பொருள் கிடைத்த விதமும், அதன் முக்கியத்துவமும் சிறு காணொளியின் வழியே காட்டப்படுகிறது. மேலும் அந்தப் பொருள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், அது மேற்கோளாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அது தொடர்பான மற்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக நம்மால் அந்தப் பொருள், அதன் முக்கியத்துவம், அது கீழடி நாகரீகத்தில் பெற்றிருந்த இடம் முதலியவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

கீழடியின் அகல் விளக்குகள்.

ஒவ்வொரு வீடும் வணிகம், வாழ்வும், வளமும், வேளாண்மை, நெய்தல் தொழில் என்று பல தலைப்புகளில் விரிகிறது. விரிவான ஒவ்வொரு பகுதியிலும் பொருட்கள் மேற்குறிப்பிட்டவாறு காட்சிப்படுத்தப்படுகின்றன. இன்னமும் சில இடங்களில் மெய்நிகர் உண்மை தொழில்நுட்பம் மூலமாக பொருட்களை பார்க்கவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இன்னமும் பல விதங்களிலும் பொருட்களை நாம் விரிவாக பார்க்க முடிகிறது.

கீழடி காளை.

உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு தங்களது தோற்ற நோக்கத்தை கடத்துவதையே தங்களது முதல் நோக்கமாக கொண்டிருக்கின்றன. கீழடி அருங்காட்சியகம் அதை அருமையாக செய்கிறது. குறைந்தது இரண்டு, மூன்று மணி நேரம் இங்கு செலவிடுவது கட்டாயம். 

தமிழக, தமிழ் கலாச்சாரத்தை, வரலாற்றை முதன்மையாக அடுத்த தலைமுறைக்கு கடத்துவதில் இது போன்ற வரலாற்று அருங்காட்சியகங்களின் பங்கு அதிகம். அதிலும் இன்றைய வாட்சப் வரலாறு ஆய்வாளர்களின் பிடியில் இருந்து இவர்களை வெளிக் கொணர்ந்து, உண்மையான வரலாற்றை நோக்கி செலுத்துவதற்கு கீழடி முக்கியமான பங்கு வகிக்கும்.

இறுதியாக, அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வரும் போது, 3000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு  நாகரீகத்தின் தொடர்ச்சியாக நாம் இன்னமும் இங்கே உலாவிக் கொண்டிருக்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்ளாமல் இருக்கவே முடியாது. 

நீங்கள் மதுரையில் இருந்தாலோ, மதுரைக்கு வேறு காரணங்களுக்காக வந்தாலும், கட்டாயம் செல்ல வேண்டிய இடம்.

பொன்னியின் செல்வன் - 2

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பது மிகவும் அரிதான விஷயம். பெரும்பாலான எதிர்பார்ப்புகளும், கதையும் முதல் பாகத்தில் வெளிப்பட்டுவிடும் என்பதால், இரண்டாம் பாக எதிர்பார்ப்புகள் சிறிது குறைவாகவே இருக்கும். மிகவும் பிரபலமான கதையாக இருந்தாலும், 'பொன்னியின் செல்வன்-2' முதலாம் பாகத்தைவிட நன்றாக இருப்பதை சற்று வியப்புடனே பார்க்க வேண்டும்.

முதலில், மூலக்கதை கல்கியுடையதாக இருந்தாலும், அதை இரண்டாம் பாகத்தில் பெருமளவில் மாற்றி இருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றங்கள் கல்கியின் புனைவுகளை ஓரளவிற்கு பின்னிற்கு தள்ளி, உண்மையை இன்னமும் அருகில் கொண்டு வந்து காட்டுகிறது. இங்கே, கல்கி எழுதியது வரலாற்று புனைவு என்ற நினைவே மக்களிடம் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். கல்கி வரலாற்றை எழுதவில்லை என்பதை உணராதவர்களே அவரது வாசகர்களில் அதிகம். கல்கியின் பல கதாபாத்திரங்கள் புனைவானவர்களே. அதில் நந்தினி முதன்மையானவள். அது போக, சேந்தன் அமுதன், பூங்குழலி, திருமலை என பலரும் புனைவு கதாபாத்திரங்களே. எனவே, இவர்களின் பகுதிகளை மாற்றுவதன் அல்லது அகற்றுவதன் மூலம் எந்த வரலாற்று பிழையும் நிகழவில்லை என்பதையும் உணர வேண்டும். 

உடையார்குடி கல்வெட்டு  துரோகிகளால் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதை குறிக்கிறது. அவனை துரோகம் செய்து கொன்றவர்கள் பெயர்களை பட்டியலிடுகிறது. அதன் பின்னர், அவனது தம்பி அருண்மொழிக்கு பதிலாக, அவர்களது பெரியப்பா மகன் மதுராந்தகன் பட்டமேறுகிறான். அவனுடைய காலத்திற்கு பின், அருண்மொழி, ராஜ ராஜ சோழன் என்ற பெயரில் பட்டமேறுகிறான். இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் வரலாற்று உண்மை. இதை தவிர்த்து அனைத்தையும் புனைவாகவே கருதவேண்டும்.

இதை இங்கே சொல்வதன் காரணம், இரண்டாம் பாக கதை 'பொன்னியின் செல்வன்' புனைவில் இருந்து விலகி, வரலாற்றுக்கு அருகே பயணிக்கிறது. இது கல்கி வாசகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தும் என்பதில் எந்த மறுகருத்தும் இல்லை. 

இரண்டாம் பாகம், ஆதித்தன்- நந்தினியின் இளவயது காதல் கதையுடன் ஆரம்பிக்கிறது. சற்று விரிவாக சொல்லப்படும் இந்தக் கதை, நந்தினிக்கு சோழ குலத்தின் மீதிருக்கும் கோபத்திற்கு சரியான காரணத்தை நிலைநிறுத்துகிறது. அதன் பின்னர், கதை முதல் பாகத்தின் முடிவில் இருந்து தொடர்கிறது. 

ஆனால், இரண்டாம் பாகம் முழுக்க, முழுக்க ஆதித்தன்-நந்தினி கதையாகவே விரிகிறது. குந்தவை, வந்தியத்தேவன் போன்ற கதாபாத்திரங்களும் பின்னே தள்ளப்பட்டுவிடுகிறார்கள். நந்தினி பிரமாண்டமாக, அவளது வஞ்சத்துடன் எழுந்து நிற்கிறாள். அவளுக்கும் ஆதித்தனுக்குமான காதலும், அதன் முடிவும் மட்டுமே கதையின் மையமாக இருக்கிறது.

அருண்மொழியின் கதாபாத்திரம் சற்று விரிவாக காட்டப்படுகிறது. ஜெயம் ரவி எளிதாக அந்த பாத்திரத்திற்குள் நுழைந்துவிடுகிறார். ஆனாலும் வானதியுடனான காதல் காட்சிகள் இல்லாதது (எனக்கு) பெரும் குறைதான். தஞ்சை கோட்டையில் 'யானைப்பாகா!' என்றழைப்பதன் மூலம் வானதி, அவர்களின் காதல் ததும்பிய முதல் சந்திப்பை நினைவிற்கு கொண்டு வருவது மட்டுமே மிஞ்சுகிறது.

சேந்தன் அமுதன்-பூங்குழலி என்னவானார்கள் என்றே தெரியவில்லை. அவர்களின் குழப்பமான பின்கதையை மணி முற்றிலும் நிராகரித்துவிட்டதன் பயன் என்று நினைக்கிறேன். முதல் பாகத்திலும், இந்தப் பாகத்திலும் சில வசனங்கள் கல்கியின் கதையை நினைவூட்டுவது, மணி இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் இறுதி வரை இருந்திருக்க வேண்டும் என்று தோன்ற வைக்கிறது. ஒரு வேளை, இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது. 

குந்தவை-வந்தியத்தேவனின் காதல் காட்சி முதல் பாதியின் உச்சமான காட்சி எனலாம். திரிஷா ஒரு யட்சியைப் போல வந்தியத்தேவனை தன்னுடைய வசப்படுத்துகிறாள். வந்தியத்தேவன் என்ன, எவனும் அத்தகைய மயக்கத்தில் இருந்து எழுவது முடியாத காரியம். 

ஆனால், நந்தினியும், ஆதித்தனும் சந்திக்கும் காட்சி குந்தவை-வந்தியத்தேவனின் சந்திப்பு வலையில் மீனை சிக்க வைப்பது என்றால், இவர்களின் சந்திப்பு, சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியுடன் விளையாடுவது போன்றது. பெரும்பாலும் close-upல் எழுக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியில், ஐஸ்வர்யாவும், விக்ரமும் சிறு வசனங்கள் மூலமாக ஒருவரையொருவர் மெதுவாக குத்திக் கிழிக்கிறார்கள். படத்தில் நந்தினியை ஐஸ்வர்யா இந்தக் காட்சியில் நம் முன்னே நிறுத்துகிறார். எதிர்பார்த்தது போலவே கரிகாலனின் மரணத்துடன் இந்தக் காட்சி முடிகிறது.

இதற்கு பின்னான 30 நிமிடங்கள் படத்தை சற்று இழுவையாக்குகின்றது என்பது உண்மைதான். இன்னமும் சீக்கிரமாக படத்தை முடித்திருக்கலாம். 

படத்தின் இயக்குனருக்கு நாம் கதையை பொறுத்தவரை முழுக்க சுதந்திரம் கொடுத்தாலும், படத்தின் இயக்கத்தில் இருக்கும் குறைகளுக்கு அவர் பொறுப்பேற்றுதான் ஆகவேண்டும். பெரிய குறை, பல இடங்களில் காட்சிகள் எந்தவித முடிவுமில்லாமல் சட்டென்று முடிந்து விடுகின்றது. உதாரணமாக, வந்தியத்தேவன் மீது நடக்கும் விசாரணை. என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் அடுத்த காட்சிக்கு சென்று விடுகிறது. வானதி தஞ்சை கோட்டையில் நுழைவதும் அப்படித்தான். கல்கியின் காட்சியை எடுக்க நினைத்தாலும், மணியின் கதை மாற்றத்தில் இது ஒட்டாமல் நிற்கிறது. இன்னமும் பல இடங்களை சொல்லலாம். புத்த விகாரங்களை தாய்லாந்தில் எடுக்க நேர்த்திருப்பதால் இருக்கும் ஒருவிதமான ஒட்டாத நிலை. மதுராந்தகன் திடீரென மனம் மாறுவதும், குதிரை வீரனாக திடீரென்று தோன்றுவதும் (கல்கியும் இப்படித்தான் எழுதியிருப்பார் என்றாலும்...) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கதையை வாசிக்காதவர்களுக்கு இந்தக் குறைகள் தெரியப்போவதில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், படத்தின் வேகமான ஓட்டம் இவற்றை எல்லாம் தாண்டி படத்தை பார்க்க வைத்து விடுகிறது. வெளியில் வந்து நிதானமாக யோசித்தாலே, இதையெல்லாம் சிந்திக்க வேண்டும். 

படத்தின் மிகப்பெரும் பலம் ரகுமானின் இசை. பல இடங்களிலும் பின்னணி இசை நம்மை கால யந்திரத்தில் ஏற்றிவிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தினுள் ஒன்றுவதற்கு அதனுடன் இயைந்து வரும் இசை முக்கிய காரணம். நான் எதிர்பார்த்த இடத்தில் இல்லை என்றாலும், 'இளையோர் சூடார்' மிகவும் அருமையான இசைக் கோர்வையாக இருக்கிறது.

முதலில் சொன்னது போல, குறைகளைத் தாண்டி, இப்படியான கதையை திரையில் கொண்டு வந்து காட்டியதில் மணி இன்னொரு முறை வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.   

வல்லம் மற்றும் திருக்கழுக்குன்றம் குடைவரைகள்.

வல்லம் குகைகள் சென்னைக்கு அருகில் இருப்பதால் அதை பார்க்காமலேயே வைத்திருந்தேன். இன்னமும் சில பல்லவ குடைவரைகள் பார்க்காமல் இருந்தாலும், இதை எப்போது வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். ஒரு வழியாக, இந்த வாரம் வல்லம் குகைகளையும், அத்துடன் திருக்கழுக்குன்றம் குடைவரையையும் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன். ஜெயஸ்ரீயும் சேர்ந்து கொள்ளவே இன்று காலை கிளம்பினோம்.

மகாபலிபுரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு ஒரு ராஜபாட்டை போட்டால், வழியில் சரியாக திருக்கழுக்குன்றம் மலையும், வல்லம் குன்றுகளும் வழியில் வந்துவிடும். எனவே இங்கும் குடைவரை கோயில்கள் இருப்பதில் ஆச்சர்யமில்லை. 

முதலில் வல்லம். வல்லம் குகைகளை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்தது. செங்கல்பட்டு அருகில் இருக்கும் ஆலப்பாக்கத்தை தேடினால், சென்னையில் இருக்கும் ஆலப்பாக்கம் வருகிறது. ஒருவழியாக அதைக் கண்டு பிடித்து செல்ல ஆரம்பித்தோம். 

செங்கல்பட்டில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆலப்பாக்கம் என்ற இடத்தின் அருகில் வல்லம் இருக்கிறது. மிகச்சிறிய கிராமமான இதை கண்மூடி திறப்பதற்குள் தாண்டிவிடுவது சாத்தியம். நாங்களும் அப்படி தாண்டி, மீண்டும் வந்த வழியிலேயே திரும்பி வல்லம் செல்லும் சிறிய தெருவிற்குள் நுழைந்தோம். தெருவின் முனையில் ஒரு சிறிய வழிகாட்டியும் இருக்கிறது.

வல்லம் குன்றில் மூன்று குடைவரைகள் இருக்கின்றன. மாலை மட்டுமே அவை திறந்திருந்தாலும். இரண்டிலும் கம்பி கதவுகள் மட்டுமே போடப்பட்டிருப்பதால், வெளியிலிருந்தே நன்றாக பார்க்க முடிகிறது. இருந்தாலும், கோயிலின் செல்லப்பா குருக்கள்(+91 9080589035) வெளியில் சென்றிருந்ததால் வரமுடியவில்லை என்று தெரிவித்தார். அவருக்கு முதலிலேயே போனில் பேசிவிட்டு சென்றால், திறந்து வைத்திருப்பார்.   

 சிறிய குன்றின் மீதேறினால், வலப்பக்கம் முதலில் இருக்கும் சிறிய குடவரை வருகிறது. இதில் ஒரு பக்கம் அமைந்துள்ள கொற்றவையின் சிற்பம் மிகவும் அழகாக இருக்கிறது.

அங்கிருந்து சிறிது மேலேறினால், இரண்டாவது குடைவரை வருகிறது. அதில் முன்பகுதி முழுவதும் இப்போதைய கட்டுமானங்களால் மறைக்கப்பட்டிருக்கிறது. எனவே அதனை அதன் உண்மையான வடிவில் பார்க்கவியலாது. வசந்தீஸ்வரம் என்றழைக்கப்படும் இந்த குடைவரையின் ஒரு பக்கம் ஜேஷ்டா தேவியின் சிலை புடைப்பு சிற்பமாக இருக்கிறது. தவ்வை என்ற தமிழ் தெய்வமான இவள், மூதேவி, அலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். பல்லவர் காலத்தில் இவளது வழிபாடு பரவலாக இருந்திருக்கிறது. எனக்கு அவளை அமைத்திருந்த விதமே, fertility goddess என்று சொல்ல கூடிய குழந்தைப்பேற்றை வழங்கக்கூடிய பெண் தெய்வங்களின் வடிவமாக தெரிந்தது. இதே போன்ற வடிவங்கள் உலகம் முழுவதும் ஒன்று போல இருப்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.


மற்றொரு பக்கம் விநாயகர் புடைப்பு சிற்பமாக இருக்கிறார். மகேந்திரவர்மன் காலத்தை சேர்ந்த இந்தக் குடவரை முழுவதும் தற்காலத்திய கட்டுமானங்களால் மூடப்பட்டுள்ளது. எனவே மகேந்திரவர்மனின் தூண்களையும் சிற்பங்களையும் பார்ப்பது சற்று சிரமமாகவே இருக்கிறது. என்றாலும் அதன் இருபக்கமும் இருக்கும் காவலர்களையும், கருவறையையும் அப்படியே வைத்திருப்பதால், அவற்றை ரசிக்கலாம். 

ஆனால் இங்கு பார்க்கவேண்டிய ஒன்று என்றால், அழகிய பல்லவ தமிழ் வரிவடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் சில வரி கல்வெட்டுகள்தான். ஒன்று 'லலிதாங்குரன்' என்ற மகேந்திரவர்மனின் பட்டப்பெயரையும், இன்னொன்றில் சத்துருமல்லன், குணபரன் என்ற பட்டப்பெயர்களையும் சொல்கிறது. 

மேலும் குடைவரைகளை எடுப்பித்த கந்தசேனன் என்பவரின் பெயரையும் பதிவு செய்கிறது. பல்லவ வரிவடிவங்களின் அழகை ரசிக்க மட்டுமே முடியும். விவரிக்க முடியாது. இன்றும் தமிழ் இப்படி எழுதப்படுமானால், தமிழின் இனிமையோடு, அழகும் பல மடங்கு அதிகரித்துவிடும். இவை மகேந்திரவர்மனின் வரிவடிவங்கள். ராஜசிம்மனின் காலத்தில்  இன்னமும் பூக்களை கோர்த்தது போல எழுதப்படும் வரிவடிவங்களே பல்லவ கிரந்தத்தின் உச்சியாகும்.






இதற்கு நேர் கீழ் இருக்கும் குடைவரையின் முன் தியான மண்டபம் எழுப்பப்பட்டு, மறைவாக இருந்ததால், எங்களால் பார்க்க முடியவில்லை. எனவே அங்கிருந்து திருக்கழுக்குன்றம் சென்றோம்.

550 செங்குத்தான படிகளை ஏறுவது மிகவும் சிரமமே. இருந்தாலும், மெதுவாக ஏறிவிட்டோம். அங்கிருக்கும் வேதகிரீஸ்வரர் கோவிலை சென்றடைந்தோம். அங்கே இருந்த சோமாஸ்கந்தர் சிலை, இதுவும் பல்லவர் கால கோவிலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது. இருந்தாலும், வேறு எந்த விதத்திலும் அதை தெரிந்து கொள்ள முடியவில்லை. இறங்கும் வழியில் இருக்கும் ஒரு கால் மண்டபம் நாங்கள் செல்வதற்குள் மூடப்பட்டுவிட்டதால், வெளியிலிருந்தே பார்த்துவிட்டு சென்னை திரும்பினோம்.  

அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 5

இடையன்குடி.

தமிழகத்தில் கிறிஸ்துவத்தை பரப்ப வந்தவர்களில் ராபர்ட் கால்டுவெல் மிகவும் தனித்துவமானவர். அவர் கிறிஸ்துவத்தை பரப்பவே வந்திருந்தாலும், அவரது விருப்பங்கள்  அதில் மட்டுமல்லாமல் இன்னமும் பல துறைகளிலும் இருந்ததால், அவரது பங்களிப்பை சரியாக கணிப்பது சிரமம். அவர் மொழியியல் இலக்கண ஒப்பு நோக்கி ஆராய்ச்சி செய்திருக்கிறார். காயல்தான் கிரேக்க புத்தகங்களில் குறிப்பிடப்படும் நகரம் என்றும் கண்டறிந்தவர். கொற்கையில் அகழ்வாராய்ச்சி செய்தார். இன்றைய ஆதிச்சநல்லூரில் அலெக்சாண்டர் ரீக்கு முன்னரே அகழ்வாராய்ச்சி செய்ய ஆரம்பித்தவர். சரித்திர ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதினார். இங்கிருக்கும் மக்களின் பழக்கவழக்கங்களையும் ஆராய்ந்து எழுதியவர். அவர் அறிந்திராத துறைகளோ, இந்த மக்களுக்காக அவர் செய்யாத உதவிகளோ இல்லை என்றே கூறலாம். 

இடையன்குடி உவரியில் இருந்து சிறிது தூரத்திலேயே இருக்கிறது. வழக்கம் போல கூகுள் கால்டுவெல்லின் நினைவில்லத்திற்கு பதிலாக ஊருக்கு வெளியே இருந்த எலிசா செவிலியர் பள்ளியின் பெண்கள் இல்லத்திற்குள் எங்களை திருப்பி விட்டு விட்டது. நல்லவேளையாக அங்கிருந்த சிறிது வயதான பெண் எங்களுக்கு சரியான வழியை தெரிவித்து அனுப்பி வைத்தார்.

இடையன்குடியில் இருக்கும் தூய திரித்துவ தேவாலயம் தமிழகத்தில் இருக்கும் CSI தேவாலயங்களில் மிகவும் பழமையானது. ராபர்ட் கால்டுவெல்லின் மேற்பார்வையில் 32 வருடங்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி எழுப்பப்பட்டது. இங்கும் கோவிலுக்கு அருகிலேயே கால்டுவெல் ஆரம்பித்த பள்ளி, பின்புறத்தில் ஒரு மருத்துவமனை போன்றவை இருக்கின்றன. இப்போதிருக்கும் தேவாலயத்திற்கு முன்பு எழுப்பப்பட்ட சிறிய ஆலயமும் அருகிலேயே இருக்கிறது. நாங்கள் சென்ற நேரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தது. அதனுள்ளேயே ஒரு ஆரம்பப்பள்ளியும் இருக்கிறது. 

அன்றைய தினம் பள்ளிக்கு இந்த பருவத்தின் கடைசி தினமாக இருக்கவேண்டும். எல்லாப்பக்கமும் மாணவர்களும், மாணவிகளும் உற்சாகமாக ஆடிக் கொண்டும், ஓடிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் இடையே நாங்கள் தேவாலயத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோம். உள்ளேயே ராபர்ட் கால்டுவெல் மற்றும் அவரது மனைவியின் கல்லறைகள் இருந்தன. ஆனால் கிறிஸ்துமஸிற்காக அவற்றின் மீது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒரு சிறு பெண் எங்களுக்கு அவை எங்கே இருக்கின்றன என்று காட்டி கொடுத்தாள்.

புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த தேவாலய மணிக்கு செல்லும் வழி திறந்துதான் இருந்தது. ஏறிவிடலாம் என்றால் உள்ளே வவ்வால்களின் வாடை மிகவும் அடர்த்தியாக இருந்ததாலும், இப்போதைக்கு batmanஆக எனக்கு விருப்பமில்லாததாலும் கீழிருந்தே பார்த்துவிட்டு கிளம்பினோம்.

தேவாலயத்திற்கு அருகிலேயே கால்டுவெல் நினைவில்லம் இருக்கிறது. நாங்கள் சென்ற நேரம் பூட்டியிருந்தாலும் (மதிய உணவு நேரம்), அங்கிருந்த ஒருவர் அதன் காவலாளி அருகில் இருக்கும் மருத்துவமனை வளாகத்திலேயே இருப்பதாக தெரிவித்து, அவரே சென்று கூட்டியும் வந்துவிட்டார். 

நினைவில்லம் பல அரிய புகைப்படங்களை கொண்டிருக்கிறது. ஆனால் கட்டிடத்தின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. உத்தரங்கள் எல்லாம் எப்போதும் விழுந்துவிடலாம் போலவும், தரையில் பதித்திருந்த கற்கள் எல்லாம் வெளியே வந்தும், உடைந்தும் இருந்தன. இல்லத்தையும் சிறிது பராமரித்து நல்ல முறையில் வைத்திருக்கலாம். 

அங்கிருந்து கிளம்பி சொக்கன் குடியிருப்பு வந்து சேர்ந்தோம். அங்கும் தேவாலயம் மூடியிருந்தது. ஊரிலும் யாருமே இருப்பது போல தெரியவில்லை. வெளியிலே இருந்த கல்லறைகளை மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பினோம்.

அறையில் வந்து சிறிது இளைப்பாறிவிட்டு, தூத்துக்குடியில் பார்க்க விரும்பிய சில இடங்களுக்கு கிளம்பினோம்.

தூத்துக்குடி.

தமிழகத்தில் ஆங்கிலேயர்களும், போர்துகீசியர்களும் மட்டுமே கிறிஸ்துவத்தை பரப்பவில்லை. பிரெஞ்சு, டச்சு போன்ற பல நாட்டவர்கள் தங்களது அடையாளங்களை விட்டு சென்றிருக்கிறார்கள். தூத்துக்குடி சில காலம் டச்சு நாட்டினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அவர்கள் எழுப்பிய ஒரு தேவாலயமே எங்களது அடுத்த இலக்கு.

இந்தியாவை கைப்பற்றி அதன் வளங்களை எடுத்து செல்ல ஆங்கிலேயர் மட்டுமே இங்கு வரவில்லை. போர்த்துகீசியர், டச்சு, பிரெஞ்சு என பல நாட்டவர்களும் வந்து சென்றார்கள். இவர்களிடையே கடும் போட்டி நிலவியது. கடற்கரை நகரங்கள் கைமாறிக் கொண்டே இருந்தன. மெட்ராஸ், பாண்டிச்சேரி என கடலோர நகரங்கள் அனைத்தும் பல்வேறு நாட்டினரால் கைப்பற்றப்படுவதும், கைவிடப்படுவதுமாக இருந்தன. தூத்துகுடியும் இதற்கு விதிவிலக்கல்ல. 

இங்கு போர்த்துகீசியர்கள் முதலில் வந்தார்கள். பின்னாலேயே டச்சு நாட்டவர் வந்தார்கள். இவர்களின் மதங்களும் வேறாக இருந்தது. போத்துக்கீசியர்கள் ரோமை கத்தோலிக்கர்கள். டச்சு நாட்டவர் சீர்திருத்த சபையை சேர்ந்தவர்கள் (இன்றைய CSI). எனவே தேவாலயங்கள் எழுப்புவது மட்டுமல்ல, இடிப்பதும் நடந்து கொண்டிருந்தது. 

அப்படியே போர்துகீசியர்களிடம் இருந்து தூத்துக்குடியை கைப்பற்றிய டச்சு நாட்டவர், அவர்களது தேவாலயங்களை இடித்து, தங்களது தேவாலயங்களை எழுப்பினார்கள். இதனால் பல வரலாற்று சுவடுகள் அழிந்து போயின. 

கடற்கரை சாலையில் அமைதியாக இருக்கும் புனித திரித்துவ தேவாலயம் அப்படியாக டச்சு நாட்டவரால் எழுப்பப்பட்டது. 'அறியப்படாத கிறிஸ்துவம்' புத்தகத்தில் இப்படியாக இடிக்கப்பட்ட போர்த்துகீசிய ஆலயத்தில் இருந்த ஒரு கல்லறை மட்டும் புதிதாக எழுப்பப்பட்ட டச்சு தேவாலயத்தில் இருப்பதை பற்றிய குறிப்பு இருக்கிறது. போர்த்துகீசிய குரு ஒருவரின் மகளான சுவானாள் என்பவளின் கல்லறை என்று கூறப்படுகிறது.  அதையும் சேர்த்து பார்க்கவே சென்றோம்.

இந்தக் கோயிலும் பூட்டியிருக்கவே, சிறிது ஏமாற்றமாக இருந்தது. அப்போது அங்கே வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் எங்களை கண்டவுடன், கதவை திறந்துவிட்டார். மாலை ஏழு மணிக்கு பூசை இருப்பதாகவும்  தெரிவித்தார். நாங்களும் உள்ளே சென்று பார்த்தோம்.

பழமை சிறிதும் மாறாமல் தேவாலயம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்து சென்ற தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்லறை கல்லும் அப்படியே இருந்தது. மிகவும் அமைதியாகவும், எந்தவித பெரிய அலங்காரமும் இல்லாமல் இருந்த அந்த ஆலயம் மனதிற்கு அணுக்கமாக இருந்தது.

உள்ளே சுற்றிவிட்டு, அங்கிருந்து கிளம்பி அருகில் இருந்த பனிமய மாதா கோயிலுக்கு சென்றோம். கோயிலுக்கு எதிரே விற்று கொண்டிருந்த பனங்கிழங்கு, மசாலா பொரி, மாங்காய் சுண்டல் என்று நொறுக்கிவிட்டு, பனிமய மாதாவை பாராமல், அங்கிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இருந்த ஒரு ஒடுக்கமான சந்திற்குள் சென்றோம். அந்த சந்தின் முடிவில், 1585ல் இந்த இடத்தில் இருந்த சிற்றாலயம் அருகிலேயே பனிமயமாதாவாக எழுப்பப்பட்ட போது, இந்த குருசடி நிர்மாணிக்கப்பட்டது என்று அருகிலேயே பொரித்து வைக்கப் பட்டிருக்கிறது. பிரெஞ்சு அரச சின்னமான பிளெயர் டே லில்ஸ் (லில்லி மலர்) குருசின் அனைத்து பக்கங்களிலும் இருக்கிறது. இதிலும் எண்ணெய் வடிந்து கொண்டிருந்தது. 

அங்கிருந்து பனிமய மாதாவை பார்த்துவிட்டதோடு எங்களது கிறிஸ்துவ தேவாலய பயணங்கள் முடிவிற்கு வந்தன. இரண்டு நாட்களில் பார்க்க முடிந்த அளவிற்கு பார்த்துவிட்ட திருப்தியோடு, மறுநாள் திருச்செந்தூரில் எனக்கு ஒரு  மொட்டையை போட்டுவிட்டு, மதுரைக்கு திரும்பினோம். 

மதுரையில் என் அம்மா கிறிஸ்துமஸிற்கு அண்ணாநகர் மாதா கோவிலில் மெழுகுவர்த்தி ஏற்றுவது வழக்கம் என்று சொல்லவே, அன்று மாலை அங்கே சென்றோம். நமக்கு மாரியம்மாவும், மரியன்னையும் ஒன்றுதானே?  

அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 4

மணப்பாடு.

தூத்துக்குடியில் இருந்து 60 கி.மீ தூரத்தில் மணப்பாடு இருக்கிறது. இந்த முறை கூகுளாண்டவரின் துணை வேண்டாம் என்று நினைத்து, நாங்களே நேராக திருச்செந்தூர் ரோட்டிற்கு வந்துவிட்டோம். 

மணப்பாடு போர்த்துகீசியர்கள் தமிழக கடற்கரைகளில் முதலில் வந்திறங்கிய இடங்களில் ஒன்று. அதற்கு மேலும் புனித சவேரியார் இங்குதான் 1542ல் மணப்பாட்டிற்கு வந்து முத்துகுளித்துறை பகுதிகள் முழுவதிலும் ஊழியம் செய்திருக்கிறார். கோவா சென்றிருந்த போது அங்கிருக்கும் போம் ஜீசஸ் பேராலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் சவேரியாரின் உடலை பார்த்திருந்தோம். இந்த முறை அவர் ஊழியம் செய்த இடங்களை பார்க்க சென்றோம்.



மணப்பாடு சற்றே பெரிய கிராமம். ஆனால் இங்கிருக்கும் தேவாலயங்கள் மிகவும் அழகானவை. கிட்டத்தட்ட ரோமை கத்தோலிக்கர்கள் நிறைந்து இருக்கும் இந்த கிராமத்தில், இருக்கும் பெரிய தேவாலயங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவை.

நாங்கள் கிட்டத்தட்ட வெயில் உச்சிக்கு வரும் நேரத்தில் பரிசுத்த ஆவியின் தேவாலயத்தை வந்தடைந்தோம். பார்த்தவுடன் நம்மை ஈர்ப்பது இந்த ஆலயங்களின் நிறம்தான். பரிசுத்த ஆவி தேவாலயம் இந்த மண்ணின் நிறத்தில் மிகவும் கம்பீரமாக எழுப்பப்பட்டிருக்கிறது. 

உள்ளே நுழைந்தவுடன் மாதாவின் சொரூபத்துடன் மிகப் பெரிய அழகான பீடம் நம்மை கவர்கிறது. அருகிலேயே புனிதர்களின் சொரூபங்களும், சவேரியாரின் வாழ்வில் இருந்து சில நிகழ்வுகளும், சிலைகளாகவும், அழகான ஓவியங்களாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. பெரும் ஆலயத்தின் ஒரு பகுதியில் பீடத்திற்கு அருகே திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஜெருசலேமில் இயேசுவை அறைந்த உண்மையான மரசிலுவையின் துண்டு ஒன்று, சவேரியாரின் விரல்களில் ஒன்று, இன்னமும் சில புனிதர்களின் துணிகளின் துண்டுகள் போன்ற பலவும் வைக்கப்பட்டிருக்கிறது. திருவிழாவின் போது இவற்றை ஊர்வலமாக எடுத்து செல்வார்களாம்.


ரோமை கத்தோலிக்கத்தின் நம்பிக்கைகள் பலவற்றையும் நாம் எப்படி வேண்டுமென்றாலும்  எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த முத்துகுளித்துறை மக்கள் இந்த நம்பிக்கைகளுக்கு பதிலாக கல்வியும், மருத்துவமும் பெற்றார்கள். இங்கும் பெரிய பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்க்க முடிகிறது. இங்கு தண்ணீர் வசதியை நூறு வருடங்களுக்கு முன்பே  செய்து கொடுத்து, அதை திருநெல்வேலி கலெக்டர் திறந்து வைத்ததாக ஒரு கல்வெட்டை கோயிலுக்கு வெளியே பார்த்தேன். 

அருகிலேயே புனித ஜேம்ஸ் பேராலயம் இருக்கிறது. அதற்கு செல்லும் வழியில் மீனவர்கள் சிலர் உரக்கப்பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். 

இன்னமும் பெரியதாக கடல் நீல நிறத்தில் இந்த தேவாலயம் அமைதியாக இருக்கிறது. அதை பார்த்து விட்டு, அருகில் இருக்கும் குன்றில் எழுப்பப்பட்டிருக்கும் புனித சிலுவை ஆலயத்திற்கு சென்றோம். இது சவேரியாரின் வருகைக்கு முன்னே  எழுப்பப்பட்ட ஆலயம் என்று  தெரிகிறது. 

இந்த ஆலயத்தின் அருகிலேயே சவேரியார் இங்கே வசித்ததாக நம்பப்படும் குகை ஒன்றும் இருக்கிறது. நாங்கள் சென்றவுடன் அங்கிருந்த பெரியவர் ஒருவர் குகையை திறந்து காட்டினார். வெளியே மிகுந்த வெப்பமாக இருந்த நேரத்தில், குகை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. மிகவும் சிறிய  குகையில் ஒரு சிலுவையும் இருக்கிறது. குகையில் ஒரு நன்னீர் கிணறும் இருக்கிறது. அதில் ஒரு வாளி நீரை எடுத்து எங்களுக்கு குடிக்க கொடுத்தார்.



இங்கும் கடலை நோக்கியும், கடலை ஒட்டியிருக்கும் மணப்பாடு கிராமத்தை நோக்கியும் பார்த்தவாறு ஒரு குருசும் இருக்கிறது. இதுவும் சற்றே வளைந்த கூனன் குருசாகவே இருக்கிறது. இதையும் சவேரியார் இங்கே வைத்ததாக அந்தப் பெரியவர் கூறினார். 



அங்கிருந்து கீழே மீண்டும் வந்து, மணப்பாட்டில் இருந்து கிளம்பினோம். வழியிலேயே இருந்த கருவாட்டு கடையில் நெய் மீன் கருவாடும் வாங்கி கொண்டு, உவரியை நோக்கி சென்றோம்.

உச்சி வேளையில் உவரியை  அடைந்தோம். புனித அந்திரேயா ஆலயத்தில் கிறிஸ்துமஸிற்கான ஆராதனையின் ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சில நடுத்தர வயது பெண்களும், சிறுமிகளும் இசையுடன் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள். சிறிது  நேரம் கேட்டு கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 

உவரியில் இருந்த மற்றொரு ஆலயம் மூடியிருந்தது. எனவே அங்கேயே ஒரு சிறிய கடையில் மீன்குழம்புடன் சாப்பிட்டுவிட்டு இடையன்குடியை நோக்கி கிளம்பினோம்.

அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 3

நாலுமாவடி.

என்னுடைய முன்னோர்களில் ஒருவர் தேரிக்காட்டில் இருந்து பிடிமண்ணை எடுத்து வந்து சிவகாசியில் ஒரு கோயிலை எழுப்பினார். பாதமுத்து அய்யனார் கோவில்தான் எங்களது குலதெய்வ கோயில் (அதனாலேயே என்னுடைய பெயர் முத்து என்று வைக்கப்பட்டது.). ஆனால் பிடிமண் எடுத்து வந்த கோயில் எதுவென்று இப்போது எவருக்கும் சரியாக நினைவில்லை. இந்த பயணம் அந்தப் பக்கமாக செல்கிறேன் என்று தெரிந்தவுடன், எனது பெரியம்மா ஒருவர் நாலுமாவடியில்தான் அந்தக் கோயில் இருப்பதாக கூறியதாக என் அம்மா தெரிவித்தார். 

நாலுமாவடியில் இரண்டு கோயில்கள் இருப்பதாக கூகுள் கூறியது. ஒன்று பாதக்கரையான் கோவில். இன்னொன்று முத்து சாஸ்தா கோயில். ஆனால் முத்து சாஸ்தா கோயில் தேரிக்காட்டிற்குள் இருந்தது. அம்மாவிடம் விசாரித்த போது பாதக்கரையான் கோயில்தான் என்று உறுதியாக கூறினார். எனவே பாதக்கரையான் கோயிலுக்கு செல்வது என்று முடிவானது.

குறும்பூருக்கு மிக அருகிலேயே நாலுமாவடி இருக்கிறது. அங்கே ஆத்தூர் என்ற இடத்தில் பாதக்கரையான் கோயில் இருப்பதாக கூகுள் காட்டியது. ஒடுக்கமாக சென்று கொண்டிருந்த சாலையில் சென்று கொண்டிருந்தோம். 'அம்பேத்கர் கோட்டடா' என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்த பாலத்தைக் கடந்தவுடன் வயல் வெளி ஆரம்பித்தது. சாலை மறைந்து கிட்டத்தட்ட வயல் வரப்பாக மாறிக்கொண்டிருந்தது. நானும் காரை சர்க்கஸில் ஓட்டுவது போல ஒட்டிக் கொண்டிருந்தேன். இன்னமும் சிறிது தூரத்தில் சாலை இல்லாமல், தரையில் முழுவதுமாக புதர் மண்டி இருந்தது. அதன் முடிவில் ஒரு பம்ப் செட் அறை மட்டுமே இருந்தது. கூகுள் இன்னமும் 100 மீ செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தது. இன்னமும் நூறு மீட்டரில் நானும், என் மனைவியும், காரும் வயல்காட்டில் உழுது கொண்டிருந்திருப்போம். சிறிது தூரம் பின் வந்து, மிகவும் சிரமப்பட்டு அங்கே காரை திருப்பி வந்த வழியே செல்ல ஆரம்பித்தோம். பாதகரையானை பார்ப்பது இயலாது என்றே தோன்றியது. 

அப்போது வயல்காட்டில் உரம் தெளித்து கொண்டிருந்த ஒருவரை பார்த்தோம். அவரிடம் கோயில் எங்கே என்றவுடன், நாங்கள் வயல்பாதையில் நுழைந்த இடத்தில் மரங்களிடையே இருந்த சிறிய கோயிலை காட்டினார். இதை எப்படி பார்க்காமல் விட்டோம் என்று நினைத்துக் கொண்டே அங்கே சென்றோம்.

மிகவும் சிறிய கோயில். எந்த சிலைகளும் இல்லை. மண் பீடங்கள் மட்டுமே இருந்தன. ஓரிடத்தில் அய்யனார் சிலையும், குதிரைகள் சிலையும் இருந்தது. பீடங்களும் சமாதியை போல இருந்தன. அது மட்டுமல்லாமல், தரையில் பாத சுவடுகள் இருந்தது போல வைத்திருந்தார்கள். அதற்கு மாலையும் இடப்பட்டிருந்தது. சில பீடங்களில் வேட்டியும், சிலவற்றில் சேலையும் சுற்றப்பட்டிருந்தது. கேட்டு தெரிந்து கொள்ள எவரும் அங்கில்லை. அருகில் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் மட்டுமே பாதக்கரையான் கோயில் என்று எழுதியிருந்தது. 

பாதக்கரையானின் கதையை பின்னர் படித்து தெரிந்து கொண்டேன். ஆனாலும் வயற்காட்டின் நடுவே இருந்த அந்தக் கோயிலும், அதில் இருந்த பீடங்களும் எதோ ஒரு விதத்தில் மனதை விட்டு அகலவில்லை. அந்தப் பகுதியில் வாழ்ந்து, எந்த விதத்திலோ அந்த பகுதிக்கு பெரிய உதவி செய்து, மக்களின் மனதில் இருப்பவராகவே பாதக்கரையான் தோன்றுகிறார். அங்கே சமாதி இருக்கிறதோ அல்லது அவை வழிபடும் பீடங்களோ, எதுவாக இருந்தாலும், அந்த கோவிலின் அமைப்பும், அது இருக்கும் இடமும் மறக்கமுடியாதது.

அருகில் முத்து சாஸ்தா கோயில் இருப்பதாக தெரிந்ததால், அதையும் கூட பார்க்கலாம் என்று அங்கிருந்து கிளம்பினோம். இந்த முறை கூகுளை நம்பாமல், விசாரித்து செல்வது என்று முடிவு செய்தோம். சிறிது தூரம் சென்றவுடன், சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களிடம் கேட்டோம். சிறிது தூரத்தில் இருக்கும் பாதக்கரையான் கோயிலை தாண்டி சென்றவுடன் வரும் என்றார்கள். சிறிது குழம்பித்தான் போனோம். இப்போதுதானே பாதக்கரையான் கோயிலில் இருந்து வருகிறோம், இந்தப் பாட்டி இனிதான் கோயில் வருகிறது என்கிறாரே என்று அவரிடமே அதைக் கேட்டோம். 

அவரும் நாலுமாவடியில் மூன்று பாதக்கரையான் கோயில்கள் இருப்பதாகவும், அதில் முதல் கோயிலைதான் நாங்கள் பார்த்திருப்பதாக தெரிவித்தார். இன்னமும் இரண்டு கோயில்கள் அங்கேயே சற்று தள்ளி இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே அவை இரண்டையும் பார்த்துவிட முடிவு செய்தேன். அந்த பாட்டியிடம், யார் இந்த பாதக்கரையான் என்று கேட்டேன். 'அவன் இந்த பக்கமா சுத்திக் கொண்டிருப்பான். யாரும் பார்த்ததில்லைபா.' என்றார். அதில் நிறைய உண்மை இருப்பதாக தெரிந்தது.

இரண்டாவது பாதக்கரையான் கோயில் மிகுந்த படாடோபத்துடன் இருந்தது. லெஜெண்ட் சரவணாவின் கைங்கர்யத்தில் கோயில் மிகவும் பெரிதாக எழுப்பப்பட்டு, அய்யனார் சிலைகள் எல்லாம் புத்தம் புதிதாக இருந்தன. அத்துடன் சிவன், பெருமாள், கிருஷ்ணன், விநாயகர் என்று பலரும் அய்யனாரை சுற்றி இருந்தார்கள். இந்த கோயிலில்தான் கொடை முதலிய திருவிழாக்கள் நடைபெறுவதாக சொன்னார்கள். முதலாவது கோயிலில் இருந்த உணர்வு, என்ன செய்தாலும் இங்கே வரவில்லை. கோயிலுக்கு அருகிலேயே லெஜெண்ட் சரவணாவின் மண்டபமா, வீடா என்று தெரியாத ஒரு நாலு அடுக்கு மாளிகை இருந்தது. 

மூன்றாவது கோயில் வெளியே கேட் போட்டு மூடப்பட்டிருந்தது. அதனால் பார்க்க முடியவில்லை. இந்தக் கோயில்களில் இருந்துதான் பிடிமண் எடுக்கப்பட்டதா என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பகுதியில் இருக்கலாம் என்ற உணர்வே போதுமானதாக இருந்தது. 

அங்கிருந்து மூக்குப்பீறி செல்வதாக திட்டம். ஆனால் நாசரேத் கோயில் 7 மணிக்கு மூடப்பட்டுவிடும் என்று தெரிந்ததால், அங்கே நேராக சென்று விடலாம் என்று முடிவு செய்துவிட்டோம். 

நாசரேத்.

என்னுடைய பெரிய அய்யாம்மை (என் அய்யம்மாவின் அண்ணன் மனைவி) நாசரேத்தை சேர்ந்தவர். நானும் திருநெல்வேலி பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் இரண்டொரு முறை நாசரேத் சென்று வந்திருக்கிறேன். இந்த முறை அங்கிருக்கும் புனித யோவான் பேராலயத்தை காணவே சென்றோம்.

 மாலை ஆறேகால் மணிக்கு அங்கு சென்றோம். வழக்கம் போலவே ஆலயம் அருகில் இருந்த பள்ளியின் மைதானத்தில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். இங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.தோரணங்களும், வண்ண விளக்குகளும் ஜொலித்துக் கொண்டிருந்தன. ஆறரை மணிக்கு ஆராதனை என்று சொன்னவுடன், அதை சிறப்பித்து விட்டு செல்வது என்று முடிவு செய்தோம்.

220 வருட வரலாறு கொண்ட இந்த ஆலயம், முதலில் பனையோலை வேய்ந்த சிறிய சர்ச்சாக இருந்து, அளவிலும், வருமானத்தில் பெரிதாக, ஆக பெரிதாக எடுத்து கட்டப்பட்டு, இன்று ஒரு பேராலயமாக இருக்கிறது. சிஎஸ்ஐ ஆலயமாக இருந்தாலும், கோதிக் முறையில், பெரும் வளைவுகளுடன் எழுப்பப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய கோயில் மணிக்கான கோபுரமும் இருக்கிறது. சுற்றிலும் வண்ணக்கண்ணாடிகளில் இயேசுவின் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது.

சரியாக ஆறரை மணிக்கு துவங்கிய ஆராதனை அரைமணி நேரம் நடந்தது.மொத்தம் 30-40 பெண்களும், 15 ஆண்களும் மட்டுமே ஆராதனைக்கு வந்திருந்தார்கள் (எங்களையும் சேர்த்து). சரியாக ஏழு மணிக்கு ஆராதனை முடிந்தவுடன், கோயில் விளக்குகள் அணைக்கப்பட்டு, மூடுவதற்கான வேலை தொடங்கியது.

நாங்களும் அங்கிருந்து மீண்டும் தூத்துக்குடிக்கு கிளம்பினோம். மீண்டும் கூகுள் 'வாகைக்குளம் ஸ்ரீவைகுண்டம் எக்ஸ்பிரஸ் ரோடு' என்று காட்டிய வழியை நம்பி சென்று பெரிதாக பல்பு வாங்கினோம். எக்ஸ்பிரஸ் ரோட்டில் வேலை நடந்து கொண்டிருந்ததால் சாலை முழுவதும் தோண்டப்பட்டு, கல்லும், மண்ணுமாக இருந்தது. ஒருவழியாக தூத்துக்குடி ஆண்டவர் நைட் கிளப்பிற்கு பரோட்டா சாப்பிட வந்து சேர்ந்தோம். அங்கும் சர்வர்களிடையே நடைபெற்ற (உண்மையான) ரோஷமான குத்துச்சண்டையில், எங்கள் மீது குத்து விழுந்து விடாமல் தப்பி, இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.  

அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 2

புன்னைக்காயல்.

கூகிளாண்டவரின் உதவியால் இப்போதும் ஆத்தூர் பாலத்தை தாண்டியவுடன் இடது பக்கத்தில் இல்லாத தெருவில் திரும்ப முயன்று, பாலத்தை சுற்றி வந்தேன். ஒருவழியாக புன்னைக்காயல் செல்லும் பாதையை கண்டு செல்ல ஆரம்பித்தோம்.

தாமிரபரணியில் நீர் நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது. ஏரல் சேர்மா கோயில் சிறிது தூரத்தில்தான் இருந்தது. செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நேரமில்லை என்பதால் புன்னைக்காயல் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

புன்னைக்காயல் செல்லும் பாதை மிகவும் சேதமடைந்து இருந்தது. மெதுவாகவே செல்ல வேண்டியிருந்தது. காயல் பகுதியின் நில அழகை பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். சுள்ளென்று உரைக்கும் வெயில், சுற்றிலும் தாமிரபரணி நீர், ஒரு பக்கம் அலையடிக்கும் கடல், எங்கும் கடல் மணல் மிகுந்த சூட்டோடு இருந்த இடத்தின் மக்களும் அது போலவே மிகுந்த கரடுமுரடாகவும், அதைவிட மிகுந்த உதவி புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். 

தூய ராஜகன்னி மாதா ஆலயத்திற்கு முதலில் சென்றோம். தமிழக கடற்கரையில் போர்த்துகீசியர்கள் முதலில் தடம் பதித்த இடங்களில் புன்னைக்காயலும் ஒன்று. பல்வேறு தமிழ் மொழி புத்தகங்களை எழுதிய ஹென்றி ஹென்றிக்ஸ் வாழ்ந்த இடம். தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் இருந்த இடமும் இதுதான்.

இவ்வளவு பெருமைகளை தாங்கி கொண்டிருக்கும் புன்னைக்காயல் இன்று சற்றே பெரிய கிராமமாக, அதன் பழம்பெருமையை பறை சாற்றும் எந்த அடையாளமுமின்றி இருந்து வருகிறது. 

நாங்கள் சென்ற எல்லா தேவாலயங்களை ஒட்டி ஒரு மருத்துவமனையும், பள்ளியும் கட்டாயம் இருந்தது. மக்களுக்கு கல்வியையும், சுகாதாரத்தையும் வழங்குவதற்கு பாதிரிகள் எத்தகைய முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதற்கு இவை இன்னமும் சாட்சியாக இருக்கின்றன. தேவாலயங்களுடன் அவர்கள் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் சேர்த்தே கட்டியிருக்கிறார்கள். அப்போது தமிழகமெங்கும் இருந்த அரசர்களும், ஜமீன்தார்களும் தாங்கள் வரியாக பெற்ற மக்களின் பணத்தை என்னதான் செய்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. 

470 வருட பழமையான தூய ராஜகன்னி மாதா ஆலயத்திற்கு அருகிலும் பள்ளி ஒன்று இருக்கிறது. பள்ளி முடியும் நேரத்தில் நாங்கள் சென்றதால், கோயிலுக்கு முன்னிருந்த மைதானம் முழுவதும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே இருந்த சவேரியார் தேவாலயத்திற்கு வழி கேட்டு சென்றால், அது மூடப்பட்டிருந்தது. மறுநாள் காலையில்தான் திறப்பார்கள் என்றதால், அங்கிருந்து கிளம்பலாம் என்று நினைத்தோம்.

மாலையாகிவிட்டதால் அங்கிருந்த சிறிய கடையில் டீ குடிக்க நின்றோம். ராமேஸ்வரத்தில் நல்ல மழை என்று காலையில் பார்த்திருந்தேன். எனவே கடைக்காரரிடம் 'இங்கெல்லாம் மழை பெய்யாதா?' என்று கேட்டேன். என்னருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் 'இங்கெல்லாம் பெய்யாது. சவேரியார் வாக்கில்ல.' என்றார். அது என்ன சவேரியார் வாக்கு என்று கேட்டதற்கு, சவேரியார் மரணப்படுக்கையில் புன்னைக்காயல் மக்களிடம், அவர்களது கிராமத்தை தீயும், வெள்ளமும் ஒன்றும் செய்து என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம். அதனால் புன்னைக்காயலில் எப்போதும் புயல், மழை இருக்காது என்றார். கொஞ்சம் வெயிலை குறைவாக அடிக்க சொல்லியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே கிளம்ப நினைக்கையில், பக்கத்தில் இருந்த தெருவில் ஒரு குருசடி இருப்பதாகவும், அதையும் பார்த்துவிட்டு செல்லுங்கள் என்றும் கூறினார்.

ஊரே கிறிஸ்துமசிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அனைவரும் தோரணம் கட்ட, வண்ண விளக்குகள் கட்ட, புது துணிகள் வாங்க என்று பரபரப்பாக இருந்தார்கள். நாங்களும் அருகில் இருந்த தெருவிற்கு சென்றால், அங்கும் ஒரு கூனன் குருசு இருந்தது. பீடத்தின் மேல் இருந்த அதில் இருந்து வடியும் எண்ணையை பிடிக்க கீழே சிறு மாடமும் இருந்தது. பழமையான குருசா அல்லது சமீபத்திய ஒன்றா என்று தெரியவில்லை. அங்கிருந்தவர்கள் அது பழமையானது என்றே சொன்னார்கள். 

அங்கிருந்து அடுத்து குரும்பூர் கிளம்பினோம்.

போர்த்துகீசியர் வருகைக்கும் முந்தைய தேவாலயமாக கருதப்படும் விசேந்தியப்பர் ஆலயத்தை நோக்கியே எங்கள் பயணம் இருந்தது. திருச்செந்தூர் ரோட்டில் இருந்து பிரியும் சிறிய பாதையில் பயணத்தை தொடர்ந்தோம். ஆனால், இங்கும் விசேந்தியப்பர் ஆலயம் மூடப்பட்டிருந்தது. வெளியில் இருந்து பார்த்துவிட்டு, அய்யனாரைத் தேடி நாலுமாவடிக்கு கிளம்பினோம்.

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...